Sunday, February 13, 2005

கத்தரிக்காய் சம்பல்

கத்தரிக்காயில் எத்தனையோ விதமாக சமையல் செய்வார்கள். ஈழத்தில் சாவகச்சேரி என்ற நகரத்தில் கத்தரிக்காயைப் பொரித்து மிளகாய் வெங்காயம் எல்லாம் சேர்த்து ஒருவிதமான துவையல் செய்வார்கள். ஆகா...ஆகா.. என்ன சுவை. அதனோடையே ஒரு கோப்பை சோற்றையே உள்ளே தள்ளிவிடலாம்.

பெரிய கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாகக் கழுவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை எண்ணையில் போட்டு கலகல என வரும் வரை பொரித்து எடுங்கள். பொரித்து எடுத்தாயிற்றா? சிறுசிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயம் (ஒரு வெங்காயம் போதும்) ,பிஞ்சு மிளகாய் (நாலு ஐந்து), தேவைக்களவான உப்பு, தேசிப்பழச் சாறு, அளவான பால் (தேங்காய்ப் பால் அல்லது பசுப்பால்) சேர்த்து கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போ எடுத்து சுவை பாருங்கள். என்ன நல்லா வந்திருக்கா?

இதைப் பற்றி பக்கத்து வீட்டு பருத்தித்துறை அம்மாவிடம் சொன்னேன். அவ சொன்னா "பிள்ளை ஊரிலை கத்தரிக்காயை நெருப்பிலை சுட்டு தோலை உரிச்சு இதே போலைத்தான் செய்யிற நாங்கள். அவையள் தோலோடை பொரிச்சு செய்யினம் நாங்கள் எண்ணையில்லாமல் செய்யிறம் அவ்வளவுதான். "உனக்கு வினாகிரி போட்டு கத்தரிக்காய் சம்பல் செய்யத் தெரியுமே? இப்ப நேரமில்லை பிறகு சொல்லுறன்“

அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும்.

6 comments:

ROSAVASANTH said...

அக்கா, இந்த மீன், கோழி அயிட்டங்கள் பற்றி எப்போ எழுத போறியள்? இல்ல நீங்கள் வெஜிடேரியனா?

Thangamani said...

வசந்த்: வெஜிடேரியனா எழுதக்கூடாதா? நானே இப்பத்தான் இதெல்லாம் படிக்கிறேன். உங்களுக்கு மீனே போதுமே!

நீங்கள் சைவ சமையலையும் எழுதவும். நன்றி!

Thangamani said...

தேசிப்பழசாறு-அப்படீன்னா?

Indrany said...

றோசா வசந் உங்களுக்கு அசைவமா ஏதாவது சாப்பிட வேணும் அப்படித்தானே? சரி கத்தரிக்காயைப் பொரித்து எடுத்து ஒரு பக்கத்தில் வைத்துவிடுங்கள்.
கோழி இறைச்சி (வேண்டுமானால் வேறு ஏதாவது இறைச்சி) சிறிதளவு எடுத்து மிகவும் மெல்லியதாக (துணிக்கைகள்) ஆக வெட்டி எடுத்து எண்ணையில் நன்றாகப் பொரித்து எடுங்கள். இப்பொழுது பொரித்த இறைச்சி பொரித்த கத்தரிக்காய் மற்றும் பிஞ்சுமிளகாய் வெங்காயம் தேசிப்பழச் சாறு (எலுமிச்சைச்சாறு) உப்பு மிளகுதூள் சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.

றோசா வசந் சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்களேன்

Indrany said...

தங்கமணி தேசிப்பழச்சாறு எலுமிச்சைச்சாறு இரண்டும் ஒன்றுதான்

கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக வெட்டி பொரித்தெடுத்து அதனுடன் வளையங்களாக வெட்டப்பட்ட வெங்காயம் சிறியதாக வெட்டிய பிஞ்சுமிளகாய் உப்பு மிளகு இவற்றுடன் ஒரு மேசைக்கரண்டி வினாகிரியையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துவிட்டு சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும். ஜே.சிறி நினைத்த மாதிரி வினாகிரி இதில் சுள்ளென்று புளிக்காது. ஏனென்றால் வினாகிரி சேர்க்கப்பட்டதே சுவையில் தெரியாது

ROSAVASANTH said...

மிக்க நன்றி, இப்போதுதான் பார்தேன். சோதித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்.