Sunday, February 20, 2005

அப்பம் (வெள்ளையப்பம்)

அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது.

தேவையான பொருட்கள்
இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா
ஒரு கிண்ணம் கோதுமை மா
ஒன்றரை தேக்கரண்டி ஈஸ்ற்
ஒரு தேக்கரண்டி சீனி
ஒரு தேக்கரண்டி அப்பச்சோடா (சமையற் சோடா)
இரண்டு மேசைக்கரண்டி ரவை
400 மி.லீற்றர் தேங்காய்ப்பால்
பசுப்பால் (சிறிதளவு)
உப்பு (தேவையான அளவு)

செய்முறை
ரவையை சிறிதளவு பசுப் பால் சேர்த்துக் கஞ்சி போன்று காய்ச்சிக் கொள்ளுங்கள்.

ஈஸ்ற்றை அரைக் கிண்ணம் நகச் சூட்டுத் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடுங்கள். ரவையின் சூடு ஆறிய பின்னர் அதனுடன் வெள்ளை அரிசிமா, கோதுமை மா, சீனி, அப்பச்சோடா, தேங்காய்ப்பால், உப்பு, காய்ச்சி ஆறிய ரவைக் கஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள்.

எமது தேசத்தில் என்றால் இரவு கலவையைச் செய்து வைத்து விட்டு மறுநாள் காலையில் அப்பம் சுட்டுக் கொள்ளுவோம். வெளிநாடுகள் அதுவும் குளிர் பிரதேசங்கள் என்பதால் குறைந்தது இந்தக் கலவையை 20 மணித்தியாலங்களாவது மூடி வைக்க வேண்டும்.

பிறகென்ன எல்லாம் தயார்தானே? அப்பச் சட்டியும் வீட்டில் இருக்கிறதுதானே அப்பத்தை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பாலப்பம் வேண்டுமாயின் அப்பத்தில் கெட்டியான பால் வார்த்து அதற்கு சக்கரை அல்லது கித்துள் அல்லது பனங்கட்டி தூவிக் கொள்ளலாம்.

அப்பம் என்றவுடன் எனக்கு நினைவில் வருவது முட்டையப்பம் தான். அப்பத்தைச் சட்டியில் வார்த்து அதன் நடுப்பகுதியில் முட்டையை உடைத்துப் போட்டு மிளகு உப்பு தூவி வேக வைக்க வேண்டும். முட்டையப்பம் சுவையானது மட்டுமல்ல மஞ்சள், வெள்ளை, தவிட்டு நிறமென பார்க்கவும் அழகாகவும் இருக்கும். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்களேன்