Monday, February 07, 2005

பருத்தித்துறை வடை

இதற்கு அடிப்படையான பெயர் தட்டை வடை. ஆனால் பருத்தித்துறை என்ற நகரம் இந்த வடையைச் செய்வதில் பிரபல்யம் என்பதால் இதற்கு பருத்தித்துறை வடை என்று ஒரு காரணப் பெயரும் உண்டு.

பல தடவைகள் நான் இந்த வடையைச் செய்து பார்த்திருக்கிறேன். பருத்தித்துறை நகரத்தில் நான் வாங்கி சாப்பிட்ட முழு நிலவு போன்ற வட்ட வடிவமான அமைப்பையோ, அற்புதமான சுவையையோ என்னால் எட்ட முடியாமல் இருந்தது. இறுதியாக ஒரு பருத்தித்துறை அம்மா ஒருவரின் தொடர்பு கிடைத்ததால் அவரிடம் இருந்து தகவலைப் பெற்று வடையைச் செய்தால் முழு நிலவு போன்ற வட்ட வடிவமான அமைப்பை என்னால் பெற முடிந்தது. ஆனால் சுவை...? அதை சாப்பிட்டுவிட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

தேவையான பொருட்கள்:
1. 250 கிராம் உழுத்தம்பருப்பு
2. 250 கிராம் கோதுமை மா
3. 250 கிராம் வெள்ளை அரிசி மா
4. மிளகாய்த்தூள் ( உறைப்புக்கு அளவாக)
5. இரண்டு மேசைக்கரண்டி பெரும்சீரகம்
6. கறிவேப்பிலை
7. வெண்காயம் ஒன்று

உழுத்தம்பருப்பை நன்கு தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை வடித்தெடுத்து, உழுந்துடன் கோதுமைமா, அரிசிமா, பெரும்சீரகம், மிளகாய்த்தூள், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெண்காயம், கறிவேப்பிலை, அளவான உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போ கலவையில் இருந்து பாக்கு அளவிலான சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். பால் பேணியின் பின்புறத்தில் எண்ணை தடவிய ஒயில் பேப்பரில் உருண்டைகளை பால் பேணியின் வட்டத்தின் அளவுக்கு தட்டியெடுத்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுத்தால் தட்டைவடை தயார். பால்பேணியில் வைத்து தட்டிப் போடுவதால் வடைகள் ஒரேயளவாக வரும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். சுவை.............? சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்களேன்