Wednesday, January 12, 2005

முட்டையில்லாத கேக்

முட்டை சைவமா? அசைவமா? பதில் தெரியாமல் குழம்புகிறீர்களா? மற்றவர்கள் கேக் சாப்பிடும் போது அதில் முட்டை போட்டிருக்கிறதே என்னால் சாப்பிட முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். முட்டையே போடாமல் உங்களுக்கு ஓரு சுத்தமான சைவ கேக் செய்யும் முறையை சுத்தமாக இங்கே தருகிறோம்.

தேவையான பொருட்கள்
1. ஓரு ரின் மில்க்
2. அரைச் சுண்டு சீனி
3. 250 கிராம் பட்டர்
4. 250 கிராம் கோதுமை மா
5. இரண்டு தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
6. ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா
7. சிறுசிறு துகள்களாக்கிய பேரிச்சம் பழம்(ஒரு கப்)
8. தேவையான அளவு எசன்ஸ்
9. ஒரு தேக்கரண்டி கொக்கோ பவுடர்
10 இரண்டு மேசைக் கரண்டி பால்

செய்முறை
பதார்த்த்தை கலப்பதற்கு முன் அவன்(Oven)ஐ 150C யில் தயார்நிலையில வைத்துக் கொள்ளவும். இவற்றை ஆரம்பிக்குமுன் ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பேரிச்சம்பழத்துண்டுகளை தேயிலை (இரண்டு பை தேயிலை)யில் ஊற விடவும்.

முதற் கலவை
ரின் மில்க், சீனி,பட்டர் ஆகியவற்றை சீனி முற்றாககக் கரைந்து பதமாக வரும்வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இரண்டாவது கலவை
மா, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் மூன்றையும் ஒன்றாக சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

முதலாவது கலவையுடன் ஏற்கனவே தேயிலையில் ஊறியிருக்கும் பேரிச்சம் பழத் துண்டுகளை எடுத்து கலந்து கொள்ளவும். இதனுடன் இரண்டாவது கலவையை சேர்த்து மரக்கரண்டியால் நன்றாகச் கலந்து கொள்ளவும்.

பின்னர் நன்கு சூடாக்கிய பாலில் பேக்கிங் சோடாவைக் கலந்து தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் கலவையுடன் நன்கு சேர்த்து விடவும். இறுதியாக வனிலா எசனையும் சேர்த்து அவனில் 45 நிமிடம் பேக்கிங் (Bake) செய்தால் உங்களுக்கான வெஜிற்றேரியன் கேக் தயார்.

அவனில் மட்டுமன்றி அவசரத்திற்கு மைக்ரோவேவிலும் இதே போன்று நீங்கள் செய்து கொள்ளலாம். மைக்ரோவேவில் செய்யும் போது பாத்திரத்திற்கு வெண்ணை தடவிக் கொள்ளுங்கள்.

அதுசரி முட்டை சைவமா? அசைவமா?

களுதொதல்

இலங்கையில் கதிர்காமம் யாத்திரை போய் வருபவர்கள் கையில் இது கண்டிப்பாக இருக்கும். நீண்ட காலம் வைத்திருந்து பாவிக்கக் கூடிய சுவை கூடிய ஒரு இனிப்புப் பதார்த்தம். சிங்களத்தில் களு என்றால் கறுப்பு. இந்தப் பதார்த்தம் கறுப்பாக இருப்பதால் களுதொதல் என்ற பெயர் இதற்கு. இதில் அதிகமான கொழுப்புச் சத்து இருப்பதால் இதைப் பார்த்துச் செய்வது மட்டுமல்ல பார்த்துச் சாப்பிடவும் வேண்டும்.

உண்மையில் களுதொதலுக்கு கித்துள் எனப்படும் ஒருவகை இனிப்பையே சேர்த்துக் கொள்வார்கள். எல்லோராலும் அதைப் பெற முடியாததால் கித்துளுக்குப் பதிலாக இங்கு சீனியைப் போட்டு செய்முறை தரப்பட்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்
1. நான்கு தேங்காய்கள்
2. ஒரு சுண்டு சிவத்த அரிசி மா
3. இரண்டு கிலோ சீனி (brown suger)
4. கஜு (தேவையான அளவு)
5. ஏலம் (சுவைக்கேற்ப)

செய்முறை
தேங்காய்களைத் துருவி தண்ணீர் கலந்து கெட்டியான பாலாக பிளிந்து எடுத்துக் கொள்ளவும்.

பிளிந்து எடுக்கப் பட்ட பால், சீனி, அரிசிமா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வாணலியில் இட்டு அளவான சூட்டில் வாணலியில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும். சரியான பதம் வரும்போது வாசனைக்கு தூளாக்கிய ஏலத்தினையும் சுவைக்கு சிறிதாக்கிய கஜுவையும் சேர்த்து தட்டையான பாத்திரத்தில் பரப்பி விட வேண்டும். சூடு ஆறியதும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்று மைக்ரோவேவ் சமையலறையில் முன்ணணியில் இடம் பிடித்துள்ளதால், களுதொதலை சுலபமான முறையில் மைக்ரோவேவில் செய்யும் முறை கீழே தரப்பட்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்
1. 500மி.லீற்றர் தேங்காய்பால்(சுலபமாக ரின்னில் கிடைக்கிறது)
2. 250 கிராம் சிவத்த அரிசிமா
3. 750 கிரைம் சீனி (brown suger)
4. கஜு
5. ஏலம்
6. தண்ணீர் (இரண்டு கோப்பை)

இவற்றை ஒன்றாகக் கலந்து மைக்ரோவேவில் வைத்து 10 நிமிடங்கள் சூடாக்கவும். பின்னர் நன்றாகக் கிளறிவிட்டு மீண்டும் 10 நிமிடங்கள் சூடாக்கவும். இப்படி மேலும் இருதடவைகள் செய்ய வேண்டும். நான்காவது தடவை கலவையை நன்கு கிளறிய பின்னர் எட்டு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து சூடாக்க வேண்டும். இறுதியாகக் கலவையை எடுத்து ஏலம், கஜு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து விட்டு மேலும் எட்டு நிமிடங்கள் மைக்ரோவேவில் சூடாக்கி எடுத்தால் களுதொதல் தயார்.