Sunday, May 15, 2005

சீடை

சமீபத்தில் ஒரு திருமண வைபவத்திற்குப் போயிருந்தேன். அங்கு பரிமாறப்பட்ட பலகாரங்கங்கள் சுவையாக இருந்தன. மறுப்பதற்கில்லை. அவற்றைச் சுவைக்கும்போது ஊர் ஞாபகங்கள் வந்து போயின. அப்போதெல்லாம் திருமண வைபவத்தில் பரிமாறப்படும் பலகாரங்களில் சீடை முன்னணியில் இருக்கும். உண்ணும் போது சுவையாகவும் தொண்டைக் குழிக்குள் இறங்கும் போது இதமாகவும் கமகம என ஒரு வாசனையும் தரும் அந்த சீடையை இன்று ஏனோ திருமண வைபவங்களில் காண முடியவில்லை. இத்தனைக்கும் அதைச் செய்வது என்னவோ அவ்வளவு சிரமமுமில்லை. திருமணத்திற்கான பலகாரச் சூட்டில் தாய்க்குலங்கள் குழுமியிருந்து ஊர் வம்பு அழந்து கொண்டு சீடையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். பொரித்தெடுத்து ஒரு பெட்டியில் போடும் சீடைகள் ஒரே அளவாக இலந்தைப் பழ அளவில் பார்க்கவே அழகாக இருக்கும். எதற்கும் அதைச் செய்யும் முறையை கீழே எழுதி வைக்கிறேன்.


தேவையான பொருட்கள்
ஒரு கப் வறுத்த அரிசிமா
அரை கப் வறுத்த உழுத்தம் மா
ஒரு தேங்காயைப் பிழிந்தெடுத்த பால்
ஒரு கப் சீனி
ஒரு லீற்றர் எண்ணை

செய்முறை
மெல்லிய சூடான தேங்காய்ப்பாலில் அரிசிமா, உழுத்தம்மா இரண்டையும் குழைத்து பதமாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவினை இலந்தைப் பழ அளவிற்கு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து, அவற்றை எண்ணையில் கலகலக்கப் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொரித்தெடுத்த உருண்டைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் பரவிவைத்துக் கொண்டு சீனியைக் காய்ச்சி அவற்றின் மேல் ஊற்றி விட்டால் சீடை தயார்.