Friday, November 27, 2009

ஆலங்காய்ப் பிட்டு

ஆலங்காய்ப் பிட்டு என்றால் எனது மகனுக்கு நல்ல விருப்பம். அனேகமான சிறார்களுக்கு இது பிடிக்கும் என்று அடித்துக் கூறலாம். எனது சின்ன வயசில் நான் அதிகம் விரும்பிச் சாப்பிடும் காலை உணவு இதுவே. இப்பொழுதும் மகனுக்குச் செய்து கொடுக்கும் சாக்கில் ஒரு பிடி பிடித்துவிடலாம்

தேவையான பொருட்கள்

ஓரு கப் வறுத்த அரிசிமா
அரை கப் வறுத்த உழுத்தம்மா
ஓரு கப் பசும்பால்
கால் கப் வறுத்த சவ்வரிசி
ஒரு ரின் மில்க் (200 m.l. condensed milk)
இரண்டு தேக்கரண்டி சீனி
சுவைக்காக முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல்
வாசனைக்கு ஏலம்

செய்முறை

அரிசிமா, உழுத்தம்மா அளவான உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பசும்பாலை தண்ணீர் கலந்து மெதுவாகச் சூடாக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது கலந்து வைத்த மாவினுக்குள் மெதுவான சூட்டில் உள்ள பாலை ஊற்றி நன்கு பிசைந்து கொண்டு ஆலங்காய் அளவிலான உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவ் உருண்டைகளை ஆவியில் வேகவைத்து ஒரு பாத்திரத்தில் பரவி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் சவ்வரிசியைப் போட்டு அதனுடன் ரின் மில்க், சீனி போட்டு கிளறியபடியே வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மா உருண்டைகளையும் போட்டு மெதுவாகக் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல், ஏலம் போட்டு இறக்கி விடுங்கள்.

என்ன ஆலங்காய்ப்பிட்டு கமகமக்கிறதா? சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கள்.