Tuesday, February 08, 2005

அச்சாறு

அச்சாறு இருந்தால் போதும் அதனோடையே இரண்டு கோப்பை சோறு சாப்பிட்டு விடுவேன். இப்போ அல்ல அது ஒரு காலம். இப்பொழுது பலவிதமான சாப்பாடுகள் வந்ததால் அச்சாறு எல்லாம் மறந்து போயிற்று. தமிழருக்கு எப்படி ஊறுகாயோ, அப்படி சிங்களவர்களுக்கு அச்சாறு. அரைத்த கடுகு, மிளகு, வினாகிரி என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான சுவை. என்ன நாக்கு ஊறுகிறதா? சரி விடயத்திற்கு வருவோம்.

தேவையான பொருட்கள்
20 சின்ன வெங்காயம் (நம்ம ஊர் வெங்காயம்)
15 பச்சை மிளகாய் (நடுவில் கத்தியால் கீறிக் கொள்ளுங்கள்)
2 கரட் (மெலிதான நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்)
2 கோப்பை வினாகிரி
2 தேக்கரண்டி கடுகு (நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்)
1 தேக்கரண்டி மிளகுத்தூள்
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்களவானது

செய்முறை
முதலில் ஒரு கோப்பை வினாகிரியை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் மெலிதான சூட்டில் வேகவையுங்கள். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மெலிதான சூட்டில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் கரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு மேலதிகமாக காய்கறிகள் தேவையானால் முள்ளங்கி, காலிபிளவர், பீன்ஸ் போன்றவற்றையும் இதேபாணியில் செய்து சேர்த்துக் கொள்ளலாம். )

சூடாயிருக்கும் வினாகிரியில் மற்றைய கோப்பை வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கோதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வையுங்கள்.

இரண்டு நாட்களின் பின்னர் போத்தலின் மூடியைத் திறந்து பாருங்கள். சாப்பிடுவதற்கு அச்சாறு அங்கே தயாராக இருக்கும்.

No comments: